Thursday, December 17, 2015

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை


தேவையான பொருட்கள்
பச்சை பசுஞ்சாணம் 5 லிட்டர்
பசுமாட்டு கோமியம் 4 லிட்டர்
பசும்பால் 3 லிட்டர்
நன்கு புளித்த தயிர் 2 லிட்டர்
பசுமாட்டு நெய் அரை லிட்டர்
இளநீர் 2
வாழைப்பழம் 12
சிறிதளவு சுண்ணாம்பு
நம்முடைய நிலத்தின் மண் கொஞ்சம்
நாட்டுச் சர்க்கரை அரைக்கிலோ
பச்சை பசு சாணி 5 கிலோவுடன், பசு மாட்டு நெய் அரை லிட்டரை கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைக்கவும். தினம் ஒரு முறை இதை பிசைந்து விடவும்.
நான்காவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை, சிமெண்டுத் தொட்டி அல்லது டிரமில் போட்டுக் கையால் நன்கு கரைத்து, கலக்கி, கம்பி வலையால் வாயை மூடி நிழலில் வைக்கவும். தினம் இருவேளை காலை, மாலை பலமுறை நன்கு கலக்கி விடவும். அதிகம் கலக்கினால் கலவைக்கு அதிகக் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிர்கள் அபரிவிதமாகப் பெருகி மிகுந்த பலன் கொடுக்கும்.
இப்படி 20 நாட்கள் கலக்கி வந்தால் பஞ்சகவ்யா கரைசல் தயாராகி விடும். இதை ஆறு மாதம் வரை தினமும் கலக்கி விட்டு, கெடாமல் வைத்துப் பயன்படுத்தலாம். தண்ணீர் குறைந்து கலவை கெட்டியானால் மீண்டும் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கலக்கினால் கலவைக்கு அதிக பலன் உண்டு.
30- 50 லிட்டர் நீரில் பஞ்சகவ்யா கலவையில் ஒரு லிட்டர் சேர்க்கலாம். பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், நிலத்தில் தண்ணீர் பாயும் நேரமும் ஊற்ற வேண்டும்
இவற்றை 50 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து தொழுவுரத்தில் ஊற்றி மதிப்பூட்டல் செய்து பயிருக்கு போடலாம். நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பயிர் வளர்சி நன்றாக இருக்கும்.
இவற்றை பயிருக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற விகிதத்தில் அடித்தால் பூச்சி நோய் தாக்கம் இருக்காது.
பஞ்சகவ்யத்தில் உள்ள சத்துக்கள்
பசும்சாணம் -பக்டீரியா, பூஞ்சாணம், நுண்ணுயிர் சத்துக்கள்
கோமியம்(யூரின்)- பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள்
பால் – புரதம்,கொழுப்பு, மாவு அமினோஅமிலம், கால்சியம் சத்துக்கள்
தயிர் -ஜீரணிக்கத்தக்க செரிமானத் தன்மையை தரவல்ல நுண்ணுயிரிகள் (லேக்டோபேஸில்லஸ்)
நெய் – விட்டமின்-A, -விட்டமின் B, கல்சியம், கொழுப்புகள்
இளநீர் – சைட்டோசைனின் எனும் வளர்ச்சி ஊக்கி மற்றும் அனைத்து வகை தாதுக்கள் (மினரல்ஸ்)
வாழைப்பழம் நொதிப்புநிலை தரவல்லதாகும். அதிக நுண்ணூட்டம் பெறுகின்றது
பஞ்சகவ்யத்தில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மிகமிக அதிகமாகவும் அந்த நுண்ணுயிர்கள் அதிக ஆற்றலுடனும் உள்ளது. பஞ்சகவ்ய தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோஸ்பைரில்லம் பத்து கோடி உள்ளது தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசடோபேக்டர் பல லட்சக்கணக்கில் உள்ளது மணிச்சத்தைக் கரைத்துக் கொடுக்கக்கூடிய பாஸ்போபேக்டீரியா ஐந்து கோடிக்கும் அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் சூடோமோனஸ் ஆறு கோடிக்கு மேல் உள்ளது
பயிர்கள் வளர்வதற்குத் தேவையான் 13 வகையான பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்களும் தேவையான அளவில் உள்ளன. எனவே, எல்லா வகையான பயிர்களுக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
மா
பூ பூக்கும் காலத்தில் மரத்தில் உள்ள எல்லா இலைகளையும் மறைக்கிற மாதிரி பூ பூக்கும். எவ்வளவு காற்று அடித்தாலும் பூ கொட்டாது. பூ பூத்து, நிறைய பிஞ்சுகள் விடும். பிஞ்சுகள் நன்கு காய்த்து, நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மாவைப் பொறுத்தவரை ஒரு ஆண்டு அதிக விளைச்சல் தந்தால், அடுத்த ஆண்டு விளைச்சல் சரியாக இருக்காது என்பார்கள். பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் இந்தப் பிரச்னைகளுக்கு எளிதில் முடிவு கட்டிவிடலாம்.
எலுமிச்சை
எலுமிச்சை செடிகளுக்கு பஞ்சகவ்யத்தை ஊற்றினால், ஆண்டு முழுக்க பூக்களும் பிஞ்சுகளும் பழங்களும் மரத்தில் தொங்கிக் கொண்டே இருக்கும். விளைச்சல் பெருகுவதோடு பழங்கள் நல்ல நிறத்துடன் அதிக நாட்கள் புத்தம் புதிசாக இருக்கும் பஞ்சகவ்யத்தில் வளரும் எலுமிச்சையில் சாறு அதிகம். ஊறுகாய்க்கு பிரமாதமாக இருக்கும்.
முருங்கை
முருங்கை மரத்துக்கு பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் நிறைய பூ பூத்துக் குலுங்கும்.
கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, வாழை, கரும்பு, மல்லிகை, கத்தரி, தென்னை, நிலக்கடலை, எள், எல்லா வகையான பயிர்களுக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

1 comment:


  1. यह एक अद्भुत और रोचक ब्लॉग है जो खेती के बारे में जानकारी और ज्ञान बढ़ाने में मदद करता है।

    https://www.merikheti.com/prakritik-kheti-ya-natural-farming-me-jal-jungle-jameen-sang-insaan-ki-sehat-se-jude-hain-raaj/

    ReplyDelete