Monday, February 18, 2013

மண் புழு உரம் தயாரித்தால் மளமளன்னு குவியுது பணம்!



செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண் வளத்தை அதிகரிக்கும் மாமருந்து இது. மண் புழுக்கள் இதற்கு கைகொடுக்கின்றன. மண் புழு உரம் தயாரிக்க கற்றுக்கொண்டால் கைநிறைய காசு பார்க்கலாம். இது மாயாஜாலம் அல்ல; ரொம்ப சிம்பிள்.

மண் புழு உரம் தயாரிப்பில் ஈடுபடும் ஈரோடு கோட்டை சக்தி அபிராமி மகளிர் சுய உதவிக்குழுவினர் கூறியதாவது: எங்கள் குழுவினர் தொழில் துவங்க யோசித்தபோது, இடமும், மூலப்பொருளும் இலவசமாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம். அதற்கேற்ப ஈரோடு காய்கனி மார்க்கெட்டில் உள்ள இடத்தைப் பயன்படுத்தி, அதில் செய்ய ஏதுவான தொழிலை யோசித்தபோது, காய்கனி மார்க்கெட்டில் கழிவுகளாகக் கொட்டப்படும் காய்கனி குப்பைகளை சேகரித்து, அதன் மூலம் மண் புழு உரம் தயாரிக்கத் திட்டமிட்டோம். இத்தொழிலுக்குத் தேவையான மாட்டுச்சாணம் மற்றும் மண்புழுக்களை மட்டும் வெளியே வாங்கினோம்.

காய்கறிக்கழிவு, மாட்டுச்சாணம், செம்மண், மண்புழு கலவையில் 2 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும், ஒரு மாதத்திற்குப் பின்னர் வாரம் ஒரு முறை மேலாகப் படியும் உரத்தை அள்ளி சேகரிக்க வேண்டும். உழைப்பும் பெரிய அளவில் இல்லை. 3 மாதத்தில் மண் புழு உரம் மற்றும் மண்புழுக்கள் உற்பத்தியாகி விற்பனைக்கு தயாராகியது. அவற்றை பாக்கெட் போட்டு கடைக்கு விற்கிறோம். விவசாயிகள் மொத்தமாகவும் வாங்கிச் செல்கிறார்கள்.

ஷெட், காய்கறிக்கழிவுகள் ஆகியவை இலவசமாகக் கிடைத்ததால், சாணம், செம்மண், மண்புழுக்கள் மற்றும் பராமரிப்புச்செலவு மட்டும் தான். அதற்கு ரூ.10 ஆயிரம் செலவானது. உரம் மற்றும் மண்புழுக்கள் விற்றதில் ரூ. 24 ஆயிரம் கிடைத்தது. 3 மாதத்தில் ரூ.14 ஆயிரம் லாபம். இதே போல் கூடுதலாக ஷெட் அமைத்து உற்பத்தி செய்தால் பல மடங்கு லாபம் பெருகும் வாய்ப்புள்ளது.

லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்

ஒரு செட்டில் ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கிறது. இதன் மதிப்பு ரூ. 22,500. மண்புழுக்கள் 5 ஆயிரம் கிடைக்கிறது. இதில் சிறியவை 50 பைசாவுக்கும், பெரியவை ஜீ1க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சராசரியாக ரூ. 4 ஆயிரம். மொத்தம் ரூ. 26,500. இதில் உற்பத்திச் செலவு ரூ. 12 ஆயிரம் போக, லாபம் ரூ.14,500. இதில் கட்டுமானச் செலவுக்கான தொகையை மீட்க ரூ. 2,500 ஒதுக்கியது போக, 12 ஆயிரம் லாபம் கிடைக்கும்.

மண் புழு உரத்தின் தேவை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப உற்பத்தி அதிகரிக்க, இடப்பரப்பளவை அதிகரித்து குறைந்தபட்சம் 3 ஷெட் போட்டு மண் புழு உற்பத்தி செய்வதன் மூலம் 3 மாதத்தில் ரூ.36 ஆயிரம் லாபம் கிடைக்கும். ஒரு ஆண்டில் ரூ. 1.44 லட்சம் லாபம் கிடைக்கும். ஒருவரே இத்தொழிலுக்குப் போதுமென்பதால், தனி நபருக்கு மாதம் ரூ.12 ஆயிரம் லாபம் கிடைக்கும். இத்தனைக்கும் இந்த தொழிலிலேயே முழுமையாக ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. ‘சைடு' தொழிலாகக்கூட செய்யலாம். இடத்தின் அளவை கூட்ட, கூட்ட தொழிற்சாலை போன்று அமைத்து, லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம்.

சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் விற்கலாம். எதிர்காலத்தில் இதன் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இடம் நிறைய இருந்தால், அதற்கேற்ப மண் புழு உரத் தயாரிப்பை அதிகரிக்க ஷெட்டை விரிவுபடுத்தலாம். அதற்கு தகுந்தபடி கைநிறைய பணம் கிடைக்கும்.

மூலப்பொருள் எங்கே கிடைக்கும்?

செம்மண் அல்லது கரிசல் மண்ணை விவசாய நிலங்களில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். சாணத்தை கால்நடை வளர்ப்போரிடம் வாங்கலாம். விவசாயிகள் தங்கள் நிலப்பகுதியில் தோண்டிய குழியில் கழிவுகளையும் மண்ணையும் போட்டு மக்க வைத்திருப்பார்கள், அதை வாங்கிக் கொள்ளலாம். மண்புழுக்கள் ஏற்கனவே மண்புழு உரம் தயாரிப்பவர்களிடம் கிடைக்கும்.

மூலதன செலவு என்ன?

கட்டமைப்புகள்:
சொந்தமாகவோ, வாடகைக்கோ ஒரு சென்ட் இடம்.
10க்கு 15 அடி நீள, அகலம், 4 அடி உயரமுள்ள தொட்டி. அதைச்சுற்றி இடுப்பளவு காம்பவுண்ட் சுவர். மேற்கூரை ஷெட்.(ஆஸ்பெஸ்டாஸ் அல்லது கூரை.) கட்டமைப்புக்கான செலவு ஒரு ஷெட்டுக்கு ரூ.50 ஆயிரம்.

உற்பத்திச் செலவு:

அடியில் பரப்ப செம்மண் அரை டன் ரூ. 500.
காய்கறிக் கழிவுகள் அல்லது மக்கிய மண் ஒரு டன் ரூ. 1500.
மாட்டுச்சாணம் ஒரு டன் ரூ.3 ஆயிரம்.
5 ஆயிரம் எண்ணிக்கையுள்ள மண்புழுக்கள் & ரூ. 5 ஆயிரம்
பராமரிப்பு கூலி ரூ. 500.
இடம் வாடகை 3 மாதத்திற்கு அதிகபட்சம் ரூ. 1500
மூலதனச் செலவு ரூ. 62 ஆயிரம்.
இத்தொழிலுக்கு வங்கிக் கடனும் கிடைக்கிறது.

தயாரிப்பது எப்படி?

மண் புழு உரம் அமைக்கும் தொட்டியில் அரை டன் செம்மண், அதற்கு மேல் ஒரு டன் காய்கறிக்கழிவு அல்லது மக்கிய மண்ணை பரப்ப வேண்டும். 20 நாள் கழித்து, அதன் மேல் ஒரு டன் மாட்டுச்சாணம் கொட்ட வேண்டும். அடுத்த 10 நாளில் மாட்டுச்சாணத்தின் மேல் 5 ஆயிரம் மண் புழுக்களை விட வேண்டும். மேல் பகுதியில் தேங்காய் நார் பரப்பி, 2 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.

ஒரு மாதத்தில் மேலிருந்து மண் புழுக்கள் உள்ளே ஊடுருவும். மேலேயுள்ள மண்ணைச் சாப்பிட்டு, வெளியாகும் கழிவுகள் உரங்களாக மேல் பகுதியில் படியும். ஒரு மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை மேற்புற மண், அதாவது மண்புழு உரத்தை அள்ள வேண்டும். படிப்படியாக மேற்புறம் அனைத்தும் மண்புழு கழிவுகளாக, உரமாக வந்து கொண்டிருக்கும். 3 மாத நிறைவில் கீழுள்ள செம்மண் பரப்புக்கு மண்புழுக்கள் சென்று விடும்.

இதன் மூலம் 2 டன் பரப்புள்ள மண், சாணப்பரப்பில், கல், செத்தை கழிவுகள் போக ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கும். இதற்கிடையில், மண் புழுக்கள் அனைத்தும் முட்டையிட்டு, சம எண்ணிக்கையில் புதிய மண்புழுக்கள் உருவாகியிருக்கும்.

நண்பேன்டா....

விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழு, உலகில் 120 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகை மண்புழுவும் வெவ்வேறு விதமான தட்பவெப்ப சூழலில்,வெவ்வேறு ஆழத்தில் 3 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆண், பெண் என்ற தனிப்பால் இல்லை. அனைத்து புழுக்களுமே 45 நாட்களுக்கு ஒரு முறை 30 முட்டைகள் வரை இடும்.

‘யுஜினத்Õ வகை மண்புழுக்கள் இந்தியாவில் அதிகளவில் உள்ளது. 15 செமீ முதல் 20 செமீ நீளமுடையது. ஒரு கிராம் எடையுள்ளது. காய்கறி, வைக்கோல், ஈரவைக்கோல், காய்ந்த சருகுகள், சாணஎரு, கழிவுஎரு, கோழிஎரு உள்ளிட்டவைகள் மண்புழுக்களுக்கு சிறந்த உணவாகும்.
மண்புழுக்களுக்கு உணவை விட தண்ணீர் மிகவும் அவசியம். உண்ணும் உணவில் 30 முதல் 40 சதவீதம் வரை தண்ணீர் இருக்க வேண்டும். பொதுவாக பகல் நேரத்தைவிட இரவில்தான் அதிகமாக சுற்றி திரியக்கூடியது . சூரியக்கதிர்கள் இதன் மீது நேரடியாக படக்கூடாது. சூரியகதிர்கள் பட்டால் உடலில் காயங்கள் ஏற்பட்டு இறந்துவிடும்.

விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்படும் மண்புழுக்களின் கழிவுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களும், பாஸ்பேட்டை கரைக்கக் கூடிய பாக்டீரியாக்களும் அதிகமாக உள்ளன. மேலும் மண்புழு கழிவில்(மண்புழு உரம்) இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ளதோடு ஹார்மோன்கள், வைட்டமின்களும் உள்ளன. இதனால் மண்புழு உரமிடப்பட்ட பயிர்கள் நன்றாக வளர்வதோடு விளைச்சலும் அதிகரிக்கிறது.

மேலும் இதன்கழிவுகள் மண்ணில் வாழும் பல வகையான நுண்ணுயிர்களுக்கு உணவாகவும் பயன்படுகின்றது. இது தவிர மண்புழு கழிவுக்கு மண்ணின் ஈர தன்மையை நிலை நிறுத்தும் திறன் அதிகம். வாரத்திற்கு மூன்று முறை தண்ணீர் பாய்ச்சுவதாக இருந்தால் மண்புழு உரம் இடப்பட்ட நிலங்களுக்கு இரண்டு முறை பாய்ச்சினாலே போதும் என்கின்றனர் வேளாண்துறையினர்.

சந்தை வாய்ப்பு:

இயற்கை உரத்தில் உற்பத்தியாகும் காய்கறி மற்றும் பயிர்களுக்கு மவுசு இருப்பதால், மண் புழு உரத்துக்கு தேவை அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களின் மண் வளத்தை மீட்கவும் மண் புழு உரங்களையே பரிந்துரைக்கின்றனர். சாதாரண நிலங்களுக்கு மட்டுமல்லாமல், மலைப்பயிரான தேயிலை, காபித் தோட்டங்களுக்கும்கூட மண் புழு உரங்களை வாங்கிச்செல்கின்றனர். இதனால் நிலங்களுக்கு டன் கணக்கில் மண் புழு உரம் தேவைப்படுகிறது.

வீடுகளில் பூந்தோட்டம் அமைப்பவர்களும், தொட்டிகளில் அழகுச் செடி வளர்ப்பவர்களுக்கும், பாக்கெட்களில் போட்டுள்ள மண்புழு உரத்தைப் பயன்படுத்துவது எளிதாக உள்ளது. அதற்காக ஒரு கிலோ, 2 கிலோ அளவில் பாக்கெட்களை வாங்க நர்சரி மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அணுகுகிறார்கள். அங்கும் சப்ளை செய்யலாம்.

நன்றி :- தமிழ் முரசு

No comments:

Post a Comment