Friday, March 22, 2013

சத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள்

லாபம் தரும் சத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள்-புதிய தொழில் வாய்ப்பு


கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற பயிர்கள் சிறுதானியப் பயிர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தானியங்களில் அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதை விட 7 முதல் 12 சதம் புரதமும், 1.3 முதல் 4.7 சதம் வரை கொழுப்பு போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது தவிர சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாவுச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுதானியங்களின் மகத்துவத்தை அறிந்த சில சுயஉதவிக்குழுவினர் இந்த தானியங்களை தனித்தனியாக வாங்கி இடித்து மாவாக்கி அதனை தோசை மற்றும் புட்டு மாவாக விற்பனை செய்து வருகின்றனர். வளர்ந்த நகரங்களில் உள்ள சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை சிறுதானிய உணவுகளுக்கு தற்போது புதிய சந்தை ஏற்பட்டுள்ளது. இந்த தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் சிறுகுழந்தைகள், பெரியவர்களின் உடல் நலனுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சிறுதானியப்பயிரின் உற்பத்தியை பெருக்கி விவசாயிகள் அதிக லாபத்தை காணமுடியும்.

கேழ்வரகு
கேழ்வரகு மானாவாரி மற்றும் குறைந்த நீரைப் பயன்படுத்தி பயிரிடப்படக் கூடிய ஒரு பயிராகும். ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சல் தருவது இதன் சிறப்பம்சம். தமிழக கிராமப்புற மக்களின் உணவில் கேழ்வரகு முக்கிய இடம் வகிக்கிறது. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் பருமன், இதயநோய்களை கட்டுக்குள் வைக்கிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. குடலில் ஏற்படும் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகிறது. உடலுக்கு தேவையான மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை தவிர்க்கிறது.

தினை
மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் தினை முக்கியமானது. மிகவும் கடினமான வறட்சியைக் கூட தாங்கி வளரக்கூடியது. பலவகையான மண் வகையிலும் நன்கு வளரும் தன்மை உடையது. மண்வளம் குறைவான நிலங்களிலும் கூட தினை வளர்ந்து பலனை அளிக்கிறது. மனித நாகரீகம் தோன்றிய தொடக்க காலத்திலிருந்தே உடல் பலத்தை தரும் முக்கிய உணவாக தினை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தேனும், தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே காணப்படுகிறது.

சாமை
ஒரு எக்டரில் சுமார் 1030 கிலோ என்ற அளவுக்கு மகசூலை சாமை பயிரில் பெறலாம். இந்த தானியத்தின் மாவு மூலம் ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் செய்யலாம்.

வரகு
வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராகும். பஞ்சம் வந்த காலத்தில் இந்த பயிரை நம்பியே பல ஆயிரக்கணக்கான மக்கள் பசியாறினர். இதன் காரணத்தால் தான் இந்த பயிரின் விதைகளை கோவில் கோபுர கலசங்களில் வைத்து பூஜை செய்கின்றனர். இதன் விதைகள் நீண்ட கால சேமிப்பிற்கு பிறகும் நன்றாக முளைக்கும் திறன் கொண்டவை. மிகக்குறுகிய காலத்தில் மிக குறைந்த மழையைக் கொண்டு அதிக அளவு தானியங்களை உற்பத்தி செய்ய முடியும்.
உடல் புண்களை ஆற்றும் தன்மையும், நுரையீரல் தொடர்பான நோய்களையும், வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் ஆற்றலும் வரகுக்கு உண்டு.

பனிவரகு
இந்த பயிர் மிககுறுகிய வயதுடையது. மானவாரி பருவத்தில் விவசாயிகள் லாபம் பெறுவதற்கான ஒரு பயிர் என்றால் அது பனிவரகு என்று சொல்லலாம். இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் அறிமுகமானது. இது குறுகிய கால வயதுடைய வறட்சியைத் தாங்கக்கூடிய ஒரு பயிராகும். இது 90 முதல் 120 செ.மீ உயரம் வரை வளரும். உமி நீக்கப்பட்ட பனிவரகு தானியமானது, அதிக புரதச்சத்தை கொண்டது. ஆடி, புரட்டாசி பட்டங்களில் மானாவாரியாக எல்லா வகை மண்ணிலும் வளரும் இயல்பு கொண்டது.
சரியான பருவத்தில் விதைக்கும் போது எந்த வகை பூச்சி, பூஞ்சாணமும் அதிகமாக இந்த பயிரை தாக்குவதில்லை. பனிவரகில் இருந்து அரிசி, அவல், உப்புமா, சப்பாத்தி, ரொட்டி, தோசை, புட்டு, முருக்கு, பக்கோடா, சேலட் போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கலாம்.
சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ பனிவரகு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையாகிறது.

குதிரைவாலி
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் குறைந்த அளவில் பயிரிடப்படுகிறது. இதன் உமி நீக்கிய அரிசி மிகவும் சத்தானது. வளமற்ற நிலங்கள் கொண்ட வறுமையான விவசாயிகளும் இதனை பயிரிடலாம். இந்த பயிர் மாட்டுத்தீவனமாகவும், மக்காச்சோளத்துடன் கலந்து பயிரிடப்படுகிறது.

இந்த தானியங்களை பயன்படுத்தி புதிய புதிய உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யலாம்.தகவல்: ப.சங்கரலிங்கம், வேளாண்மை இணைஇயக்குநர் மற்றும் கி.சுருளிபொம்மு, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), மதுரை


https://www.facebook.com/vergalaithedi

Thursday, March 21, 2013

இளைஞன் ஒருத்தரால் இவ்வளவும் முடியுமா?

ஆலங்குளம் விவசாயியின் ஒருங்கிணைந்த விவசாயம் :



இயற்கை விவசாயம் 
இளைஞன் ஒருத்தரால் இவ்வளவும் முடியுமா அதும் நம்மூரில் என்று வியக்கும் வண்ணம் வந்தது இந்த தினமணி கட்டுரை. கொஞ்சம் பழசுதான். இருந்தாலும் படிக்கலாம்.

காலங்காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளே விவசாய தொழிலைக் குறைத்து வரும் சூழலில், 31 வயதே நிரம்பிய பட்டதாரி இளைஞர் ஒருவர் விவசாயம் செய்து வருவதுடன்,விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தும், கலை நிகழ்ச்சிகள் மூலம் விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார். விவசாயமும், நாட்டுப்புறக்கலையும் எனது இரண்டு கண்கள் எனக் கூறும் அவர், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வீராணத்தை சேர்ந்த ஆறுமுகம். எம்.ஏ, எம்.பில் பட்டதாரியான அவரை நேரில் சந்தித்த போது..

விவசாயம் மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
இந்தியாவின் அடிப்படை ஆதாரமான தொழிலே விவசாயம் தான்.அந்த விவசாயத்தை நாம் ஏன் செய்யக்கூடாது எனப் பள்ளி பருவத்திலே ஆர்வம் ஏற்பட்டது.அதற்கு எனது தாய் சொர்ணம் மற்றும் எனது கல்லூரி பேராசிரியர் மகாதேவன் ஆகியோர் தூண்டுதலாக இருந்தனர். இதன் மூலம் 1999-லே விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். புதுமையான தொழில் நுட்பத்துடன் விவசாயம் செய்ய மாவட்ட உழவர் பயிற்சிமைய அலுவலர்களும், கால்நடை ஆராய்ச்சி நிலைய அலுவலர்களும் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

ஆலங்குளம் அருகே உள்ள வீராணத்தில் 15 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 5 ஏக்கரிலும், திருநெல்வேலி அருகே உள்ள தென்பத்து பகுதியில் 1 ஏக்கர் நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறேன்.நெல்,உளுந்து, எள், சோளம், சூரியகாந்தி போன்றவற்றைப் பயிர்செய்கின்றேன். கால்நடைகளும் வளர்த்து வருகிறேன்.

விவசாய தொழிலை என்ன முறையில் செய்கிறீர்கள்?
நான் இயற்கை உரங்களான
மண்புழுஉரம்,
பசுந்தாள்உரம்,
மாட்டுச்சாணம்,
இலைவழி உரமான மண்புழுகுளிகைநீர்,
பல்உயிர்பெருக்க கரைசல்கள்,
தானிய கரைசல்கள்
போன்றவைகளைத்தான் உரமாக பயன்படுத்துகிறேன். பயிர்களுக்கு மருந்தாக
கத்தாழை,
எருக்கம்இலை,
ஊமத்தை இலை,
நொச்சி இலை,
வசம்பு
போன்றவைகளை கரைசலாக தயார் செய்து மூலிகை பூச்சி விரட்டிகளாக பயன்படுத்தி வருகிறேன்.இயற்கை உரம் மற்றும் மூலிகை பூச்சி விரட்டிகள் அனைத்துமே நானே தயாரித்து பயன்படுத்துகிறேன்.
நான் விவசாயத்தில் இறங்கிய முதல் மூன்று ஆண்டுகள் நஷ்டம் அடைந்தாலும், தற்போது லாபம் கிடைக்கும் அளவிற்கு வளர்த்து கொண்டேன்.

விவசாயம் செய்ய நீங்கள் பெற்ற பயிற்சிகள் என்னென்ன??
திருநெல்வேலி உழவர் பயிற்சி நிலையம் மூலமாக
இயற்கைவழி விவசாய பயிற்சி,
விவசாயத்தில் புதிய தொழில்நுட்ப பயிற்சி,
வேளாண் பொறியியல் தொழில்நுட்ப பயிற்சி,
மண் பரிசோதனை பயிற்சி ஆகிய பயிற்சிகளும்,
ராமையன்பட்டி கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில்
ஆடு,கறவைமாடு, வெண்பன்றி, கோழி, காடை, வான்கோழி வளர்ப்புகள் குறித்த பயிற்சியும்,
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில்
காளான் வளர்ப்பு பயிற்சியும்,
தென்காசியில்
பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சியும்,
மதுரையில்
நீர் மேலாண்மை குறித்த பயிற்சியும்
பெற்றேன்.தொடர்ந்து டெல்லி பூசா அக்ரி யுனிவர்சிட்டியில் நடைபெற்ற விவசாய பயிற்சி மற்றும் கண்காட்சியிலும், கர்நாடக மாநிலம் மாண்டியா அக்ரி யுனிவர்சிட்டியில் விதை உற்பத்திசெய்தல் உள்ளிட்ட பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளேன். நான் கற்றவற்றை எங்கள் பகுதி விவசாயிகளுக்கும், மகளிர்குழுக்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன். பள்ளி மாணவர்களின் ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறேன்.

விவசாயம் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியது பற்றி..?
2005 ல் தஞ்சாவூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், நிலத்தடிநீரை பற்றி ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தேன். இதற்கு மாநில அளவில் ஆறுதல்பரிசு கிடைத்தது.
2006ல் சிக்கிமில் நடைபெற்ற தேசிய அளவிலான அறிவியல் இயக்க மாநாட்டில் மண்புழு உரமும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தேன். அதற்கு தேசிய அளவில் முதல்பரிசு கிடைத்தது.
தொடர்ந்து தென் இந்திய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மண்புழு உரமும் அசோலா நவகவ்யம் என்ற தலைப்பிலும், மண்புழு உரமும் மண் புழு குளிகை நீரும் என்றை தலைப்பிலும் ஆராய்ச்சிகட்டுரைகள் சமர்ப்பித்து மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளேன்.
விவசாயம் தொடர்பான இதர செயல்பாடுகள் குறித்து..?

கைகுத்தல் அரிசி தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன்.எங்கள் பகுதி விவசாயிகளுக்கு மண்பரிசோதனை செய்ய ஆலோசனை வழங்கி செய்தும் வருகிறேன். என்னுடைய பிறந்தநாளை நான் கொண்டாடுவது இல்லை. நான் வளர்க்கும் கால்நடைகளுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தலைவர்களின் பெயர்களை சூட்டி மகிழ்வதுடன், அந்த கால்நடைகளுக்கு ஆண்டுதோறும் பிறந்தநாள்விழா கொண்டாடி வருகிறேன். சங்கமம் மண்புழு உர உற்பத்தி கூடம் என வைத்து அதில் 20 விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறேன். ஆடு மற்றும் கரவை மாடுகள் வளர்ப்பதோடு, வீட்டில் காகம், பூனை, வெள்ளை எலி உள்ளிட்டவற்றையும் வளர்த்து வருகிறேன்.

கலைப்பணி குறித்து..?
சலங்கைஒலி என்னும் கலைக்குழு வைத்துள்ளேன். இதன் மூலம் கரகம், காவடி, ஒயிலாட்டம், கும்மி, தீச்சட்டிநடனம், காளிநடனம், பறைஆட்டம், கோலாட்டம், சக்கைகுச்சிஆட்டம், சுடலைமாடன் நடனம் போன்றவை செய்து வருகிறேன். புதிதாக ஆண்கள் குழுக்கள், மகளிர்குழுக்கள் உருவாக்கி, அவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பேச்சுகலை, நடனக்கலை உள்ளிட்ட கலைபயிற்சியும் அளித்து வருகிறேன்.

பெற்ற விருதுகள் பற்றி…?
ரத்ததானம் வழங்குதல், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட சமூக பணிகள் செய்துள்ள எனக்கு, ரோட்டரி கிளப் சார்பில், சிறந்த கிராமத்து இளைஞர் விருதும்,தொண்டு நிறுவனங்கள் சார்பில் கலைஜீவன்,கலைஞாயிறு, நாடகக் கலை செல்வர் ஆகிய விருதுகள் கிடைத்துள்ளன. 2002 ல் சிறந்த உழவர் மன்ற அமைப்பாளர் விருதை பெற்றேன்.

உங்களை மனதைப் பாதிக்கிற விவசாயம்?
நான் எம்.ஏ. எம்.பில் படித்திருந்தாலும், என் தொழில் விவசாயம் என்ற ஒரே காரணத்திற்காக எனக்குப் பெண் கொடுக்கத் தயங்குகிறார்கள். இதைத்தவிர தற்போது வேறொரு பிரச்னையும் இல்லை.

நன்றி : http://velanarangam.wordpress.com/

Thursday, March 7, 2013

சுவையான குடிநீரைப் பெற முடியும்











Thanks to vikatan:

''சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.
மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும்.

மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள்.

மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும்.

ப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது.

குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.

தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள்.

ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது.




Wednesday, March 6, 2013

வீட்டிலேயே தயாரிக்கலாம் மின்சாரம்

வீட்டிலேயே தயாரிக்கலாம் மின்சாரம்
--------------------------------------------------

குறைந்த செலவில் வீட்டிலேயே காற்றாலையை அமைத்து மின்சாரம் தயாரித்து வருகிறார்கள் இரண்டு இளைஞர்கள்

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்சாரத் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்கள் மின்சாரத் தேவைகளுக்காக, ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மின்சாரத் தட்டுப்பாட்டைத் தீர்க்க புது முயற்சியாக, உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், ராமு என்ற இரு இளைஞர்கள், ஆறாயிரம் ரூபாய் செலவில் காற்றாலையை உருவாக்கியுள்ளனர்.

சுரேஷ், ஐ.டி.ஐ. படித்தவர். ராமு, எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். பெரிய காற்றாலைகள்போல் இல்லாமல், வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்து இயக்கக்கூடிய வகையில் இந்தக் காற்றாலையை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

சுரேஷ் வீட்டின் மொட்டை மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கைகளைப் பொருத்தியுள்ளனர். அதில் டைனமோவைப் பொருத்தி இறக்கைகளை சுழலுமாறு வடிவமைத்துள்ளனர். டைனமோவின் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தை ஒரு பெல்ட் மூலம் இணைத்துள்ளனர். இதனால் காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு இறக்கைகள் சுற்றும்போது அதன் மூலம் டைனமோ மின்சாரம் இயக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

எங்கள் வீட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்க காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்கத் திட்டமிட்டோம். ஆனால், காற்றாலையை உருவாக்க, எங்களுக்குப் போதுமான உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் நாங்களே உதிரி பாகங்களை உருவாக்கினோம். பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை வெட்டி இறக்கையாக மாற்றினோம். அதேபோல கிரைண்டரில் பயன்படுத்தும் சக்கரத்தை இதில் பயன்படுத்தியுள்ளோம். டைனமோவில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, ஒரு மின் கம்பியின் உதவியுடன் பேட்டரியில் சேமிக்கிறோம்" என்கிறார் சுரேஷ்.

ஜெனரேட்டர், இன்வெட்டர் போன்ற சாதனங்களை வாங்கினால் அதிக செலவாகும். வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்து காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம். இதை அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தலாம்" என்கிறார் ராமு.

மின்தட்டுப்பாடு இல்லாத நேரத்தில்கூட, சுரேஷின் வீட்டில் அவர் தயாரித்திருக்கும் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த சுரேஷ், தற்போது 300 ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்துகிறார்.

தேசிய நெடுஞ்சாலைகள், கடலோரப் பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும், காற்றைக் கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தையே பயன்படுத்தலாம். இதற்குத் தேவையான பொருள்களை நிறுவனங்கள் செய்து கொடுத்தால், இன்னும் குறைவான செலவில், அதிகளவில் உற்பத்தியைக் கொடுக்க முடியும்" என்கின்றனர் இந்த இளைஞர்கள்.

சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் இந்த இளைஞர்களை ஊக்குவிப்பதுடன் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் செயலில் இறங்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோளும்...!

-----பிரபு சுபாஷ்----

சூரிய ஒளி மருந்து தெளிப்பான்









\

சூரிய ஒளி மருந்து தெளிப்பான்: வியக்க வைத்தது மாணவனின் செயல் விளக்கம்

காரைக்கால் பள்ளி மாணவன் வடிமைத்துள்ள சூரிய ஒளி மருந்து தெளிப்பான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

வயல்களில் மனித தி கொண்டு இயக்கும் ஸ்பிரேயர்கள் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு சோர்வு ஏற்படுகிறது.பெட்ரோல் ஸ்பிரேயர்கள் பயன்படுத்தினால் விரைவாக மருந்து தெளிக்க வேண்டும். இரைச்சல், அதிகமாக இருக்கும்.இதற்கு மாற்றாக சூரிய ஒளி பூச்சி கொல்லி மருந்து தெளிப்பானை காரைக்கால் கீழக்காசாகுடி ஆத்மாலயா பள்ளி 8ம் வகுப்பு மாணவன் முகேஷ் நாராயணன்,13; வடிமைத்துள்ளார். முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து செயல்விளக்கம் காண்பித்தார்.

இது குறித்து பள்ளி மாணவன் முகேஷ் நாராயணன் கூறியதாவது:

இந்த புதிய வகை ஸ்பிரேயரில் சோலர் பேனல், டி.சி., மோட்டார், டேங்க், நாசில், பேட்டரி, சுவிட்ச் போர்டு, மொபைல் போன் சார்ஜர், புல் வெட்டி, மின்சார பல்புகளுடன் ஒருங்கிணைந்து உருவாக்கப் பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலும் சூரிய ஒளியில் இயங்கும்.விவசாயிகளுக்கு தலைகவசம் போல் செயல்படும் சூரிய ஒளி தகட்டில் இருந்து கிடைக்கும் மின்சாரம் உற்பத்தியாகி பேட்ரியில் சேமிக்கப்படும்.டி.சி.,மோட்டார், மருந்து சேமிப்பு கலனில் இருந்து, மருந்து மிகவும் எளிதாக பயிர்கள் மேல் தெளிக்கும். இதனை மற்ற வகை ஸ்பிரேயர்கள் போல் வேகமாக இயக்க வேண்டிய அவசியம் இல்லை. வேகத்தை மாற்றியமைத்துகொள்ளலாம். தேவையற்ற சப்தமும் வராது. இதில் உள்ள லெட் விளக்குகளை வீடுகளுக்கு மின் விளக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். 3 கிலோ எடை கொண்ட சூரிய ஒளி மருந்து தெளிப்பான் உருவாக்க 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே தேவைப்பட்டது' என்றார்.




Tuesday, March 5, 2013

உரம் உங்களை கைவிடாது!


கேள்வியே பட்டிராத பெயர்களில் எல்லாம் புதிது புதிதாக மக்களைத் தாக்குகின்றன நோய்கள். பல நோய்களுக்கும் காரணமாகச் சொல்லப்படுவது, செயற்கை உரங்கள் மற்றும் ரசாயன பூச்சிக் கொல்லிகளின் அதிகபட்ச பயன்பாடு. இயற்கையோடு இணைந்திருந்த நம் முன்னோர் காலத்தில் இத்தனை நோய்கள் இருந்ததில்லை. 

வசதி இருப்பவர்கள் செயற்கை உரக் கலப்பில்லாமல் இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுகளை வாங்கி, ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள், புதுப்புது பிரச்னைகளுடன் வாழ்க்கைப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லையா?
‘‘ஏன் இல்லை..? 

இயற்கை விவசாயத்துக்குப் பயன்படற மண் புழு உரம் இருக்கிற போது, உயிரைப் பறிக்கிற செயற்கை உரங்களை ஏன் திரும்பிப் பார்க்கணும்?’’ எனக் கேட்கிறார் சரஸ்வதி. துறையூர், ஒட்டம்பட்டியைச் சேர்ந்த இவருக்கும், இவரது குடும்பத்தாருக்கும், மண்புழு உரம் தயாரிப்புதான் வாழ்க்கைக்கான ஆதாரம்! ‘‘அஞ்சாவதுக்கு மேல படிக்கலீங்க. கல்யாணத்துக்குப் பிறகு பத்து மாடுங்க வச்சு வளர்த்திட்டிருந்தோம். 

பராமரிக்க வசதியில்லாம, வித்துட்டோம். அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டிருந்தப்ப, எங்க ஊர்ல மண் புழு உரம் தயாரிக்கிறது பத்தி 
மீட்டிங் போட்டாங்க. அதைப் பார்த்துட்டு, கத்துக்கிட்டு வந்து, பண்ண ஆரம்பிச்சோம். பொதுவா மண்புழுக்களை விவசாயிகளோட நண்பன்னு சொல்வாங்க. மண்புழு உரம், பயிர்களுக்கு பாதகமே பண்ணாது. 

நோய் வராமக் காப்பாத்தும். இந்த உரத்துல தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துன்னு எல்லாம் உண்டு. தொடர்ந்து பயன்படுத்தினா, மண் வளம் அதிகரிக்கும். பயிர்களோட வேர் வளர்ச்சியும், பூக்கும், காய்க்கும் சக்தியும் அதிகமாகும். வழக்கத்தைவிட 20 முதல் 30 சதவிகிதம் கூடுதல் மகசூல் பார்க்கலாம். பெரிய அளவுல விவசாயம் பண்றவங்களுக்கு மட்டுமில்லாம, சின்னத் தோட்டம், நர்சரி வச்சுப் பராமரிக்கிறவங்களும் மண்புழு தயாரிப்புத் தொழிலில் நம்பி இறங்கலாம். உரம் உங்களைக் கைவிடாது’’ என நம்பிக்கைத் தருகிறார். 

இது இப்படித்தான்!

மூலப்பொருள்கள் : மாட்டு எரு, மண் புழு, வைக்கோல், பழைய கோணி, தண்ணீர், தென்னை மட்டைகள், மூடி போட்ட தொட்டிகள் அல்லது வாளிகள். எங்கே வாங்கலாம்? 

முதலீடு? : மாட்டு எருவை மாடுகள் வளர்ப்போரிடம் வாங்கலாம். கிராமங்களில் மாட்டுப்பண்ணைகள் அதிகம் என்பதால் அங்கே சுலபமாகக் கிடைக்கும். விவசாயிகளிடமோ அல்லது ஏற்கனவே மண்புழு உரத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்களிடமோ புழுக்களை வாங்கலாம். ஒரு டிராக்டர் அளவு மாட்டு எருவே ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு கிலோ புழுவின் விலை 350 ரூபாய். வண்டி வாடகை, கொட்டகை அல்லது தொட்டி கட்டும் செலவுகள் தனி.

இட வசதி : பெரிய அளவில் தொடங்க நினைப்போர், கொட்டகை போட்டு, 5 அடி அளவுள்ள தொட்டிகள் கட்டி தனி இடத்தில் தொடங்கலாம். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், மூடிகளோடு கூடிய ஒரே அளவிலான தொட்டிகளிலேயே கூட புழுக்களை வளர்க்கலாம்.

எப்படி வளர்ப்பது? : தொட்டிகளில் எருவைக் கொட்டி, புழுவைக் கலந்து விட்டு, 15 நாள்களுக்கு தண்ணீர் விட வேண்டும். சமையலறைக் கழிவுகளைக் கூட தினமும் தொட்டியில் போட்டு, மண்ணால் மூடி விடலாம். புதிதாக மண் போட வேண்டியதில்லை. 

மண்புழுக்கள் உணவாக உண்டு, வெளியேற்றும் எச்சமே உரம். புழுக்களை விட்ட 7 முதல் 14 நாள்கள் கழித்து மேல்பரப்பில் குருணை வடிவில் காணப்படும் புழுவின் எச்சங்களைத் தனியே சேகரிக்க வேண்டும். பிறகு அதை சலித்தால், கிடைப்பதுதான் மண்புழு உரம்.

விற்பனை வாய்ப்பு? : கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், விவசாயிகளிடம் விற்கலாம். நகரங்களில் வசிப்பவர்கள், நர்சரி வைத்திருப்போரிடமும், வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களிடமும் விற்பனைக்குக் கொடுக்கலாம்.

மாத வருமானம்? : ஒரு மூட்டை உரம் 250 ரூபாய். ஒரு நாளைக்கு 5 அடி அளவுள்ள ஒரு தொட்டியிலிருந்து 1 மூட்டை உரம் எடுக்கலாம். 50 சதவிகித லாபம் உறுதி.

பயிற்சி? : ஒரே நாள் பயிற்சி. கட்டணம் 250 ரூபாய்.

நன்றி :- தினகரன்